வெற்றிக்கனி!
இயற்கையோடு நமது வாழ்வை இணைத்துப் பார்க்கும் அழகும், அந்த இயற்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடங்களும் ஏராளம். இத்தகைய ஒப்பீடுகள் நமது சங்க இலக்கியங்களிலும் நவீன இலக்கியங்களிலும் அதிகளவில் புலவர் பெருமக்களால் கையாளப்பட்டுள்ளது. இயற்கையின் ஒரு நிகழ்வை வர்ணித்து அதன் மூலம் வாழ்வியல் நெறியை உலகிற்கு காட்டுவது இன்றியமையாததாக அமைந்துள்ளது.
எதை தற்போது விதைக்கின்றோமோ அதை தான் பிற்காலத்தில் அறுவடை செய்யமுடியும். எதை விதைத்தோமோ அதை தான் தற்போது அறுவடை செய்துக் கொண்டிருக்கின்றோம். இலக்கை நோக்கி பயணிக்க உழைப்பு ஒன்றே மூலதனம். உழைப்பே விவசாயம். உழைப்பிற்கு துணையாக நிற்பது நமது நற்சிந்தனைகள். உழைப்பை தவறான ஒரு செயலுக்கு உரிதாக்கினோமேயானால், அதன் விளைவையும் நாம் தான் அனுபவிக்க நேரிடும்.
நமது உழைப்பு எத்தகையது என்று, அந்த உழைப்பால் வரும் பலனில் வெளிப்படும்.
நமது முயற்சி குறித்து அனைவரிடமும் விவரிக்க வேண்டிய அவசியமும் இல்லை. கடுமையாக நற்சிந்தனையோடு உழைத்தாலும் வெற்றி கிடைக்கவில்லையே என்று சிலர் கூறுவதுண்டு. அத்தகையோருக்கு அவர்களது அயராது உழைப்பால் கிடைக்கும் அனுபவமும் பக்குவமும் பலரது வாழ்க்கையில் வழிகாட்டியாகவும் அமையும். "நான் வேண்டிய அனைத்தையும் கடவுள் எனக்கு தரவில்லை. ஆனால், எனக்கு தேவையானதை கடவுள் தராமல் இருக்கவும் இல்லை" என்கிறார் சுவாமி விவேகானந்தர். திருப்பாவையிலும், "ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்" என்கிறாள் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார். நமக்கு எது தேவையோ, நமது உழைப்பிற்கு உரித்தானது எதுவோ அது வெளிப்பட்டே ஆகும். அதை யாராலும் தடுக்க முடியாது.
ஔவையாரும் இதனைப் பறைசாற்றும் விதமாக கொன்றைவேந்தனில் வெளிப்படுத்துகிறார்.

Comments
Post a Comment